Showing posts with label planet. Show all posts
Showing posts with label planet. Show all posts

Wednesday, April 27, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 11

இந்திய ஜோதிடவியலின் 3 தூண்கள்
(3 Pillars of Indian Astrology)


இந்திய ஜோதிடம் கிரகம், நட்சத்திரம், ராசி என்ற 3 விஷயங்களை அடிப்படை தூண்களாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஜோதிட விஷயங்களும் இம்மூன்றின் மேல் நுட்பத்துடன் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கட்டிடமே.

கிரகங்கள் 9, நட்சத்திரங்கள் 27, ராசிகள் 12 இவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் ஒருவர் நன்கு அறிந்து, கணித்து, அதன் பயன்பாடுகளை ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன் சொல்லத் தெரிந்தால் அவரே ஒரு சிறந்த ஜோதிடர் ஆவார்.

ஜோதிடம் என்பது ஒரு பெருங்கடல் என்றும், அப்பெருங்கடலை கடப்பது அவ்வளவு எளிதல்ல, அதை எல்லோராலும் கற்க, புரிந்து கொள்ள இயலாது என்றும் அதைக் கற்றுணர்ந்த சிலர், பலரிடம் சொல்லி பயமுறுத்தி வருகின்றனர். சிறிய வயதிலிருந்தே நமக்கு அவ்வாறு சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால் நமக்கு அவ்வாறு தோன்றுகிறது.

பெருங்கடலை கடக்க நமக்கு 3 அடிப்படை விஷயங்களே தேவை. படகு, துடுப்பு, படகோட்டி. ராசி என்னும் படகை, நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொண்டு, சரியான திசையில் செலுத்தும் படகோட்டியே கிரகமாகும்.

எப்படி படகு, துடுப்பு, படகோட்டி ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவைகளோ அதைப் போல கிரகம், நட்சத்திரம், ராசி இவைகள் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.

அவைகள் எப்படி தொடர்புடையன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

எமது அடுத்தப் பதிவு: ஜோதிடம் கற்கலாம் வாங்க - 12


Thursday, January 20, 2011

ஜாதகம் என்றால் என்ன?

ஜாதகம் என்றால் என்ன?
ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு. இதனை எளிதில் விளங்கும்படி கட்டங்களில், விவரங்களை எழுதி வைப்பார்கள். நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்துகிறது. ராசி என்பது 12 பாகத்தில் ஒரு பகுதி, இப்போதைக்கு ராசி என்றால் என்ன என்பதை இந்த அளவிற்கு புரிந்து கொண்டால் போதுமானது.

உடனே, என்னுடைய ராசி சிம்மம் என்று ஜோதிடர் சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன தலைவா? என்று கேட்கத் தோன்றும். பொதுவாக ஜோதிடர் சொல்லும், உங்களுடைய ராசி, பத்திரிக்கையில் வரும் வார ராசிபலன், மாத ராசிபலன் எல்லாம் எதனைக் குறிக்கிறது என்றால், “ஜென்ம ராசி”யைக் குறிக்கும். அடுத்த கேள்வி, ஜென்ம ராசி என்றால் என்ன?

ஜென்ம ராசி என்பது, பிறந்த நேரத்தில் ராசி சக்கரத்தில், எந்த ராசியில் சந்திரன் நிற்கிறாரோ, அந்த ராசி தான் உங்கள் ஜென்ம ராசியாகும். அதனால் இன்று முதல், உங்கள் ராசியை, ஜென்ம ராசி என்று கூறி பழகுங்கள். அப்படி என்றால் கோவில்களில், அர்ச்சனை செய்யும் பொழுது, அர்ச்சகர் உங்க நட்சத்திரம் சொல்லுங்கோ! என்று கேட்கிறாரே, அது என்ன?

நமக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் சந்திரன். அருகில் உள்ளதால், அதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும், அதனால் அதன் இருப்பை துல்லியமாக கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. துல்லிய கணக்கீட்டிற்காக, மீண்டும் அண்ட வெளியை, 108 பாகமாக பிரித்து (அந்த 1 பாகத்தை, 1 பாதம் என்று இனி சொல்லுவோம்) அதில் எந்த பாகத்தில், (பிறந்த நேரத்தில்) சந்திரன் நிலை கொண்டுள்ளான் என்று குறிப்பார்கள். அதாவது, அண்ட வெளியை 12 பாகங்களாகப் பிரித்தால், அதன் 1 பாகத்தை ராசி என்றும், 108 பாகமாக பிரித்தால், அதன் 1 பாகத்தை, பாதம் என்றும் சொல்லுவோம்.

4 பாதத்திற்கு ஒரு பெயர் சூட்டினால் அது நட்சத்திரம் ஆகும். அப்படியென்றால் 108/4 = 27, அதாவது அண்டத்தை 27 நட்சத்திரமாக பிரித்து பெயர் சொல்லாம். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

27 நட்சத்திரம் தான் வான் வெளியில் உள்ளதா? என்று ஒரு அன்பர் கேட்பது காதில் விழுகிறது. பெயர் அப்படி தனித்தனியாக வைதுள்ளார்களே தவிர, ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரக் கூட்டமாகும். உதாரணத்திற்கு கார்த்திகை என்பது 6 நட்சத்திரங்கள் சேர்ந்த ஒரு கூட்டமாகும். பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் அதனை அறுமீன் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நமக்கு அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளார்கள்.

உங்கள் ஜாதகத்தில், 108 பாதத்தில் முதல் 4 பாததிற்குள், சந்திரன் நின்றால் நீங்கள் அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர், அதாவது உங்கள் “ஜென்ம நட்சத்திரம்” அஸ்வினி ஆகும். உதாரணத்திற்கு 3 வது பாதத்தில் சந்திரன் நின்றால், உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகத்தில், அஸ்வினி-3 என்று குறிப்பிடுவார்கள். இனி அர்ச்சகர் கேட்கும் போது அஸ்வினி 3-ஆம் பாதம் என்றுதான் கூற வேண்டும்.
சரி நண்பர்களே ! இனி கோவிலில் அர்ச்சகர் கேட்கும் போது உங்கள் ஜென்ம நட்சத்திர, பாதம் என்னவென்று உங்கள் ஜாதகத்தை பார்த்து அதன் படி கூறுங்கள். பாதம் கண்டிப்பாக கூற வேண்டும்.

நன்றி ! மீண்டும் சந்திப்போம் !
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற தாரக மந்திரத்துடன்,

உங்கள் அன்பன்
இராம்கரன்,
20 ஜனவரி 2011
tamiljatakam@gmail.com

(அடுத்த பதிவு: ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சிலர் சொல்வதேன்?)