Sunday, January 23, 2011

ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சொல்வதேன்?

ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சொல்வதேன் ?

பல மதங்களிலும், பல நாடுகளிலும் விண்வெளி பற்றியும், கோள்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தீர்க்க தரிசிகள், எதிர்காலத்தில் என்ன நடக்கும், யார் அவதரிப்பார்கள் போன்ற விவரங்களையும் சொல்லி வைத்துவிட்டுச் சென்றனர், அதன் படி நடந்த சான்றுகளும் புனித பைபிளில் காணப்படுகிறது. விண்வெளியில் நடக்கும், நிகழ்வுகளை வைத்தே இன்றைக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள், என்பது நமக்கெல்லாம் அறிந்த விஷயமே. ரம்ஜான், பக்ரீத், ஹஜ் போன்றவற்றை, சந்திரனின் நிலையை அறிந்தே கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான நிக்காஹ் (திருமண) பத்திரிக்கையிலும் அவர்கள் பிறைச் சந்திரனையும், நட்சத்திரத்தையும் அட்டைப்படத்தில் குறிப்பிட மறப்பதில்லை. பத்திரிக்கையின் உள்ளே அரபி மாதப் பெயரையும், பிறை எண் போன்ற விவரங்களையும் ஆங்கில தேதியுடன் குறிப்பிடுகிறார்கள். பிறை எண் என்பது வேறொன்றும் இல்லை, சந்திரனின் ஓட்டத்தை, ஜோதிடம் குறிப்பிடும் “திதி” என்பதேயாகும்.
வினாயகர் சதுர்த்தி, சதுர்த்தி திதியிலும், கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) அஷ்டமி திதியிலும், இதைப்போலவே, மற்ற எல்லா இந்து கொண்டாட்டங்களும், திதி மற்றும் நட்சத்திரங்களை வைத்தே, கணிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில், விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும், ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது என்பதை எல்லா மதங்களும் ஒப்புக்கொள்கின்றன, மறுப்பதில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக ஜோதிடம், ஒரு தனி மனிதனுக்கு, நாட்டிற்கு, உலகத்திற்கு விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் தாக்கததை, பலன்களை விவரிக்கிறது.

சில மதங்களில் உள்ள ஒரு சிலர் ஜோதிடத்தை ஏற்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் பல. அவர்களை நேரடியாக சந்தித்து, கலந்துரையாடிய பின்பே இதனை எழுதுகிறேன்.

அவர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருமாறு :

(1) முதலாவதாக, அவர்கள் பின்பற்றும் புனித நூல்களில் ஜோதிடம் பற்றிய விளக்கம் இல்லை. கோள்களுக்கும், தனி மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சொல்லப்படவில்லை. புனித நூல்களில் சொல்லப்படாத, விஷயங்களை நாங்கள் ஏன் பின் பற்ற வேண்டும்? நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? என்று கேட்கிறார்கள்.

(2) இரண்டாவதாக, ஜோதிடத்தை நம்புபவர்கள், இறைவனை மறந்துவிட்டு, இறைவனை வழிபடுவதை விட்டுவிட்டு, ஜோதிடர் பின்னால் போகத் தொடங்கிவிடுவார்கள். இது இறைவனுக்கு எதிரான செயல், என்று கருதுகிறார்கள். மதத்தை ஸ்தாபித்தவர்களையும் (Founder of the Religion) மறந்து, அவர்களின் போதனைகளையும் மறந்துவிடுவார்களோ, இதனால் அந்த மதத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டுவிடலாம், என்றும் பயப்படுகிறார்கள்.

(3) மூன்றாவதாக, மற்ற மததிற்கும், நமக்கும் உள்ள வேறுபாட்டை (தனித்தன்மையை), இழந்து விடக்கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணமே !

(4) பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்வதால், அதற்கு தண்டனையாக மரணம் நிகழ்கிறது. பாவம் செய்யாமல் இருக்கப் பழகுவோம், அப்படியே செய்தாலும், பாவ மன்னிப்பு பெற்றால் போதுமானது, பிறகு ஏன் ஜோதிடரிடம் போக வேண்டும், என்பது ஒரு சாரரது கருத்தாகும்.

(5) ஜோதிடரிடம் சென்றால், அந்த தோஷம் உள்ளது, இந்த தோஷம் உள்ளது என்று கூறி மனதை நோகடிப்பாரோ என்ற கவலையும், பரிகாரம் செய்யனும் என்று எதையாவது சொல்லி, பணம் கறந்து விடுவாரோ என்ற பயமும் ஒரு காரணமே!

(6) எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த, மறக்கப்பட வேண்டிய, மறைக்கப்பட்ட விஷயத்தை ஜோதிடர் கூறிவிடுவாரோ, என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

(7) இன்னும் பல காரணங்கள் இருந்தால், அன்பர்களே எனக்கு தெரிவித்தால் அதைப் பற்றி ஆராயலாம்.

இவ்வாறு பல காரணங்களால், ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சிலர் சொல்லுகிறார்கள்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல் ! என்ற மந்திரத்துடன்,

அன்பன்
இராம்கரன்
23 ஜனவரி 2011
tamiljatakam@gmail.com

(அடுத்த பதிவு : ஜாதகம் பார்ப்பதால் நன்மையா ? தீமையா-1?

No comments: