Monday, August 20, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர்

- ஒரு கலக்கல் ஆய்வு
பார்வை என்பது மௌன மொழி. ஒருவருக்கொருவர் தமது எண்ணங்களை பேசாமல் வெளிப்படுத்த, பார்வை என்ற மொழியை பயன்படுத்துவர். பார்வை பலவிதம். பார்வை பல பொருட்களில் (அதாங்க! தூய தமிழில் அர்த்தம் என்று சொல்வோமே) உணரப்படுகின்றன. அதனால், பார்வை என்ற சொல், பன்மைத் தன்மையைக் கொண்டதாக கூறலாம். அவைகளை விவரமாக பார்க்கலாம். முதலில் நமது தமிழ்ப் புலவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். முதலில் திருவள்ளுவர் உலகப் பொதுமறையில் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.
விருந்தினர் குறித்து கூறுகையில்,
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
முகர்ந்தால், மூச்சுக்காற்று பட்டு வாடிவிடுமாம், மென்மையான அனிச்ச மலர். ஆனால், நாம் பார்க்கும் பார்வையிலேயே விருந்தினர் வாடி விடுவார்களாம். விருந்தோம்பல் குறித்து இதனைவிட சிறந்த ஆய்வை உலகில் வேறு எந்த மொழி இலக்கியவாதியும் செய்துள்ளாரா என்று தெரியவில்லை.
பார்வையின் பொருள்: விருந்தினரிடம் கனிவு

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
அடுத்தவன் மனைவியை பார்க்காத பேராண்மை, அறம் மட்டுமல்ல, சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும். ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களால் வால்மீகி கூறியவற்றை, ஒன்றேமுக்காலடி வெண்பாவில் சொன்ன வள்ளுவனை எங்கனம் பாராட்டுவது.
பார்வையின் பொருள்: நன்னடத்தை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. அதாவது, தான் கொடுக்கும் பொருளை ஏற்று அதனால், அவருடைய முகம் மலர்வதைக் காணும் வரை கொடையாளரின் நிலை பிச்சை கேட்டவரின் நிலையை விட கொடியதாக இருக்கும். நம்மில் எத்தனை பேர் வறியவரின் முக மலர்ச்சியை கண்டு இருக்கிறோம். இதனை விட மனித நேயம் எங்கேயாவது, எந்த மொழி இலக்கியத்திலாவது அல்லது இறக்குமதி செய்யப்பட்ட எந்த மத நூலிலாவது சொல்லப்பட்டுள்ளதா?

பார்வையின் பொருள்: மனித நேயம்

 

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ? என்று டாஸ்மாக் தமிழ்க்குடி மகன்களை பார்த்து வருத்தப்படுகிறார்.

பார்வையின் பொருள்: தெளிதல்

 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

எதிரிகளை தாக்க வரும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது, என்னுடைய பார்வைக்கு அவளின் பதில் பார்வை.

பார்வையின் பொருள்: அதீத ஆற்றல்

 

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

பார்வையின் பொருள்: காதல் மொழி

 

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்.

அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

பார்வையின் பொருள்: பேசும் பார்வை

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

நாங்கள் நுண் அறிவு மிக்கவர் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

பார்வையின் பொருள்: மனதை அளத்தல்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

காதலரை பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே! இதில் உவமையாக சொல்லப்பட்டது, வானியல் பூர்வமான ஒரு நிகழ்வைப் பற்றி. அது வேறு ஒன்றமல்ல, கிரகணத்தை வைத்து சொல்லப்பட்ட ஒரு உவமை. இக்குறளில் பயின்று வரும் அணி, எடுத்துக் காட்டு உவமை அணியா அல்லது இல்பொருள் உவமை அணியா என்று இன்றளவிலும், இந்தக் குழப்பம் எனக்கு இருக்கிறது. தமிழ் ஆர்வலர்களின் கவனத்திற்கு விடுகிறேன்.

பார்வையின் பொருள்: ஊரையே பேச வைப்பது

 

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

பார்வையின் பொருள்: உட்பொருளை உணர்த்த வல்லது.

மீண்டும் சந்திப்போம்
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
எமது அடுத்தப் பதிவு : கண்ணடித்து கலக்கும் மூவர் - 2


பிற்சேர்க்கை :
திருவள்ளுவர் குறித்து அப்துல் கலாம்
காண்டீபன் என்ற பெயரில் எழுதி வரும் ஜகன்மோகன் ஐஏஎஸ் எழுதிய கங்கை கொண்ட செம்மொழி என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ஆளுனர் மாளிகையில் 22 ஜூன் 2009 அன்று நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். கலாம் பேசுகையில்,

நாம் பல்வேறு பெரும் புலவர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை படித்துள்ளோம். என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் இருக்கும் 1,330 குறள்களில் இல்லாத கருத்துக்கள் எதுவும் இல்லை. அவரது இலக்கிய பணி மகத்தானது. ஈடு இணையற்றது.

மாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.

சமுதாய முன்னேற்றத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்க்கை முறையையும், வாழ்வியல் நெறிகளையும் அவரது வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவ செய்ய தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.


1 comment:

Sivakumar said...

பார்வை என்பது மௌன மொழி-மிகச் சிறப்பு.நன்(று)றி!