Monday, September 3, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர் – 2


கடந்த பதிவில், இராகு, கேதுவுக்கு பார்வை இல்லை என்று பார்த்தோம். இந்தப் பதிவில் சில கிரகங்களின் பார்வை குறித்த ஆய்வை தொடரலாம்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும், தான் நிற்கும் இராசியிலிருந்து 7-ஆவது இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள். 

எடுத்துக்காட்டாக, சூரியன் மேஷ இராசியில் நின்றுகொண்டு, மேஷத்திற்கு 7-ஆம் இராசியான துலா இராசியையும், துலாத்தில் ஏதேனும் கிரகம் இருந்தால், அந்த கிரகத்தையும் பார்ப்பார். இதைப்போலவே சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களும், தான் இருக்கும் இராசியிலிருந்து, 7-ஆம் இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள். இந்தப் பார்வையை, ஜோதிடர்கள் ஏழாம் பார்வை அல்லது சப்தம பார்வை என்று குறிப்பிடுவார்கள். இனி இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை, விவரமாக பார்க்கலாம்.


சந்திரன்

முதலில் சந்திரனை எடுத்துக் கொள்வோம், அவர் பௌர்ணமி நெருக்கத்தில் தான் சூரியனுக்கு 7-ஆம் இராசிக்கு வருவார். தோராயமாக இரண்டரை நாட்கள், இருவரும் கண்களால் கதை பேசிக் கொள்வார்கள். பிறகு, அவரவர் வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள். அதே நாட்களில் சந்திரன், புதனையும், சுக்கிரனையும் பார்த்தும் ஒரு ஹலோ சொல்லிவிடுவார். பக்கத்து வீட்டு அங்கிளுக்கு ஹலோ சொல்லும் போது, அதே சாக்கில் அவருக்கு பக்கத்திலேயே இருக்கும் பிள்ளைகளுக்கும் ஹலோ சொல்வதைப் போல என்று நினைத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு, அவர்களும் சந்திரனுக்கு ஹலோ சொல்வார்கள் தமது 7-ஆம் பார்வையால். மற்ற நாட்களில் இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. ஆனால், மற்ற கிரகங்களை, மற்ற நாட்களில், அவர்களின் நிலைகளுக்கேற்ப தனது 7-ஆம் பார்வையால், சந்திரன் பார்த்து விட வாய்ப்புள்ளது. சந்திரனின் பார்வையை, வளர்பிறை காலத்தில் சுபகிரக பார்வையாகவும், தேய் பிறை காலத்தில் அவரது பார்வையை அசுப கிரக பார்வையாகவும் எடுத்துக் கொள்வார்கள். வளர்பிறையோ, தேய்பிறையோ சந்திரன் மகரத்திலிருந்து, தன் சொந்த வீடான கடகத்தை பார்ப்பதை மட்டும், சுபத்துவமிக்க பார்வையாக ஏற்கலாம். எந்த ஒரு கிரகமும், தன்னுடைய சொந்த வீட்டை பார்ப்பது, நன்மை பயக்கும் என்ற ஜோதிட பொது விதிப்படி இது நன்மையே. ஆனால், சந்திரன் மகரத்தில் தீய கிரக சேர்க்கை பெறாமலிருக்க வேண்டும்.


சூரியன், புதன், சுக்கிரன்
சந்திரனுக்கு மட்டுமல்ல, இந்த மூன்று கிரகங்களுக்கும் கூட 7-ஆம் பார்வை இருப்பதாக இந்தப் பதிவின் தொடக்கத்தில் பார்த்தோம். இந்த மூன்று கிரகங்களும் தாம் இருக்கும் ராசிக்கு, 7-ஆம் இராசியையும், அந்த இராசியில் உள்ள கிரகங்களையும் பார்க்கும் என்று கூறினோம். ஆனால், இந்த மூன்று கிரகங்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள இயலாது. ஏனெனில், புதனும், சுக்கிரனும், சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கிரகங்கள் என்பதால், அவைகள் சூரியனுக்கு 7-ஆம் இராசிக்கோ, அல்லது ஒருவருக்கொருவர் 7-ஆம் இராசிக்கோ செல்வதில்லை. இதனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 7-ஆம் பார்வையை பயன்படுத்தி இவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்க இயலாது, ஆனால் மற்ற கிரகங்களைப் பார்க்க இயலும்.

ஒருவர், உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்து, சுக்கிரன் சூரியனை பார்க்கிறார், புதனை பார்க்கிறார், என்று கதையளந்தால், அவரிடமிருந்து உங்கள் ஜாதகத்தை உடனடியாக வாங்கிக் கொண்டு நான் வேறு ஒரு நல்ல ஜோதிடரை பார்க்கப் போகிறேன் என்று கூறி எஸ்கேப் ஆகிவிடவும். ஏதோ என்னால் இயன்ற உதவி, ஒரு இலவச அறிவுரை.

ஒரு வழியாக கண்ணடித்து கலக்கும் அந்த மூவர் யார் என்று யூகித்து இருப்பீர்கள். யூகிக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, அடுத்த பதிவு வரை காத்திருக்கவும்.

மீண்டும் சந்திப்போம்

கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com




பிற்சேர்க்கை :

இராகு, கேது - ஜோதிடம் என்ற பதிவில், காம்பினேஷன் குறித்து கேட்டிருந்த கேள்விக்கு இப்பொழுது பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் எல்லா பாவங்களிலும், இருப்பதற்கான காம்பினேஷன்கள் வருவதில்லை. மூன்று பாவங்களுக்கு இடையிலேயே வீடு கட்டி விளையாடுவார்கள். அதாவது, சூரியன் 5-ஆம் பாவத்தில் இருப்பதாகக் கொள்வோமெனில், புதன் மற்றும் சுக்கிரன், 4, 5, 6 –ஆம் பாவங்களிலேயே இருக்கக் கூடும். அதாவது, சூரியனுக்கு முன் பாவத்திலேயோ அல்லது சூரியன் இருக்கும் பாவத்திலேயோ அல்லது அடுத்த பாவத்திலேயோ தான் இருக்கக்கூடும். கிரக ஸ்புடம் மற்றும் பாவ கணித ஆராய்ச்சி செய்து பார்க்கையில், அதிக பட்சமாக சூரியனுக்கு முன்பின், 3 வீடுகள் வரை செல்லவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் சில சம்ஸ்கிருத கிரந்தங்களில், சூரியனுக்கு, 4-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் என்று சொல்லப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. மிக மிக அரிதான காம்பினேஷனாக அது இருக்கும் (தியரிடிகலி பாஸிபிள்).
இளைஞர்களைக் கவர வேண்டியே சில இடங்களில் ஆங்கில கலப்பு இருக்கும், தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். முகநூலில் ஒரு பதிவை தூய தமிழில் இட்டேன். உடனே ஒரு இளைஞர், அவருடைய கைப்பேசியில், தமிழ் எழுத்துரு சரிவரத் தெரியவில்லை என்று வருத்தப்பட்டு, அதற்கு ஒரு பின்னூட்டம் இட்டார். அதனை நான் வாசித்து விட்டு, கொஞ்சம் மெனக்கிட்டு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு பதிவிட்டேன். உடனே வேறொரு இளைஞர், அதற்கும் ஒரு பின்னூட்டம் இட்டார். எவ்வாறு தெரியுமா?

Sir, enakku intha aangila padhivukku, artham puriyala. Aanaa etho nalla vishayam solringanu theriyuthu. Thayavu seythu intha pathivai Tanglishil idumaru kettukolkiren. Nanri

Tanglishil,  2 வரி எழுதியதற்கே எனக்கு தூக்கம் வந்துவிட்டது, ஒரு நாளெல்லாம் இந்த Tanglish -ஐ வைத்து எப்படிதான் பொழுது போக்குகிறார்களோ !

மீண்டும் சந்திப்போம் !

4 comments:

Anonymous said...

பெரு மதிப்பிற்குரிய ஜோதிட ஆசான் திரு. ராம்கரன் அவர்களே ,
இனிய காலை வணக்கம் !
பெண்களுக்கு நடுத்தர வயதில் தலையாய பிரச்சனையாக
இருப்பது உடற்பருமனும் , மாதவிடாய்க் கோளாறும் .
இதற்கு என்னென்ன கிரகங்கள் காரணமாக அமைகின்றன ?
அவற்றிற்குப் பரிஹாரம் என்ன என்று ஒரு தனிப் பதிவில்
விளக்கினால் அனைவர்க்கும் மிகப் பயனுள்ளதாய் அமையும்.
செய்வீர்களா ? நன்றி !

ramkaran said...

நோயறிதல் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத உள்ளேன். அப்பொழுது, இதனை குறித்து விரிவாக ஆராயலாம். நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

என் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றிகள் பல !
ஆவலுடன் காத்து இருக்கிறேன் ...
கண்ணடித்து மூவரும் வெகுவாகக் கலக்குகின்றனரே ...
நன்றி !

ramkaran said...

கண்ணடித்து கலக்கும் மூவர் இனிதான் வரப் போகிறார்கள்.